"சார்... சும்மா டெஸ்ட் டெலிகாஸ்ட் இது. இதையே இரண்டு மாசத்திலே இருபது லட்சம் பேர் பார்த்திருக்காங்க. (யாருக்கு தெரியும் !!) எப்படி சினிமாவிலே ஒரு சாதனையை(??!!) செஞ்சேனோ, இந்த வெப் டிவியிலேயும் என்னோட சாதனை தொடரும்" ஆர்பாட்டமாக பேச ஆரம்பித்தார் விஜய.டி.ராஜேந்தர். இவர் புதிதாக துவங்கியிருக்கும் குறள்டிவிஇன்போ.காம் குறித்துதான் இந்த பெருமிதம்.சினிமா, இலக்கியம், பல்சுவை என்ற பிரிவுகளோடு, ஈழத்தமிழர்களின் இன்னல்களுக்கும் குரல் கொடுக்கிற டி.வியாக இது இருக்கும் என்றவரிடம், புலிகளுக்கு ஆதரவாக பேசிய சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆதரவாக பேசினால் கைது செய்யப்படுவீர்களே என்றார் ஒரு நிருபர். அவ்வளவுதான்....
'உங்களுடைய விருப்பம் அதுதான்னா அதுக்காக கவலைப்படுறவன் இந்த விஜய.டிராஜேந்தர் இல்லே. ஈழத்தமிழர்கள் நலனை வலியுறுத்தி எனக்கு வழங்கப்பட்ட சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியையே தூக்கி எறிஞ்சவன் நான். சாதாரண கவுன்சிலர் பதவியை கூட விட்டு தராதவர்கள் மத்தியில் என்னுடைய செயலை யாரும் பாராட்ட வேண்டாம். விமர்சனம் பண்ணாமல் இருந்தாலே போதும். நீங்க சொல்ற போராளிகள் என்பவர்கள் யார்? ஈழத்தமிழர்கள்தானே! இதை சொன்னால் என்னை கைது செய்வேன் என்றால், நான் இப்போதே ரெடி' என்றார் ஆவேசமாக!
'மே 13 ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வருது. அதிலே ஈழத்தமிழர் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன். மே 15 ந் தேதியில் இருந்து என்னுடைய 'ஒருதலைக் காதல்' படத்தை ஆரம்பிக்கப் போறேன். குறளரசனை ஹீரோவாக அறிமுகப்படுத்துற இன்னொரு படத்தையும் துவங்கப் போறேன்' என்றார்.
முன்னதாக திரையிடப்பட்ட குறள் டிவி ட்ரெய்லரில் அநேக நிகழ்ச்சிகளில் இவரே திரையில் தோன்றி வசனங்கள் பேசிக் கொண்டிருந்தார். மற்றொரு டி.ராஜேந்தர் ஷோ?
