Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Friday, March 20, 2009

Muslim lady eats Noodles - முஸ்லிம் பெண்கள் சாப்பிட படும் பாடு!





இது யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கவும்!

Tuesday, March 10, 2009

Prevention in Agriculture - காந்தியின் தேசமே, விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!



இன்று காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.

"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி
- அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.

அதே போல, அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது.
அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே ஒதுக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!

இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்)
பல
ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...



இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.

ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்??


"கிராமங்களிலிருந்து சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் நூற்றுக்கு தொன்னூறு பேர் விவசாயிகள். காரணம் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்மொழியப்படவில்லை". இவ்வாறு நண்பர் மதிபாலா தனது அற்ப்புதமான கட்டுரையில் சொல்லியிருந்தார். உண்மையிலும் உண்மை.. இது தொடர்பில் என்னுடைய சில கருத்தையும் பதிவு செய்ய விரும்பி இதை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".

மதிபாலா நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..
ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.



இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.

இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான்.


நன்றி - தமிழர் நேசன்

Saturday, February 07, 2009

Laptop in low price (Rs.500) - 500 ரூபாய்க்கு லேப்-டாப்


எல்லாருக்கும் கம்ப்யூட்டர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இன்னும் ஆறு மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள 20 ஆயிரம் கல்வி நிறுவனங்களுக்கு,. 500 ரூபாயில் "லேப்-டாப்' கம்ப்யூட்டர் வழங்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.ஆரம்பக்கல்வியில் இருந்து மேல்நிலைக்கல்வி வரை படிப் போர் எண்ணிக்கை இன்னும் கணிசமான சதவீதத்தை நாம் எட்டவில்லை; மேலும், நகர்ப்புறங்களில், பரவிய அளவுக்கு கம்ப்யூட்டர் கல்வி அறிவு கிராமங்களில் பரவவில்லை.இதனால், எல்லாருக்கும் சமமான கல்வியை தரவும், கம்ப்யூட்டர் கல்வி இடைவெளியை போக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வரும் 2012 திட்ட காலத்திற்குள் மேனிலைக்கல்வி எட்டுவோர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது; மேலும், எல்லாருக்கும் கம்ப்யூட்டர், நெட்வொர்க் கல்வி வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது.இதற்காக, தேசிய கல்வி ஊக்குவிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் ஒரு கட்டமாகத்தான், தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்ப திட்டம் ஏற்படுத்தப்பட்டது. எல்லா கல்வி நிறுவனங்களும் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்புடன் கூடியவகையில், இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இதன் குறிக்கோள்.மத்திய, மாநில அரசுகளால், தனியாரால் நடத்தப்படும் 20 ஆயிரம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் இன்டர்நெட் வசதி இல்லை.

சில பள்ளிகளில் பெயருக்கு கூட கம்ப்யூட்டர் இல்லை.கம்ப்யூட்டர் கல்வி அறியாமையை போக்க, மலிவு விலை கம்ப்யூட்டர் சப்ளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கம்ப்யூட்டர் தருவதுடன், அதில், விரிவுபடுத்தப்பட்ட மெமரி, லான், வை - பீ போன்ற நெட் வசதிகளுடன் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.இதற்கான எலக்ட்ரானிக் சாதன தொழில்நுட்பத்தை பெங்களூரு நகரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.,யும் ஆராய்ந்து இறுதிக்கட்டத்துக்கு வந்துள் ளது.இந்த நிறுவனங்களின் தொழில்நுட்பம் இறுதியாக்கப்பட்டதும், இதன் அடிப்படையில், லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரித்து 500 ரூபாயில் விற்பனை செய்யும் பொறுப்பை தனியார் ஏஜன்சிகளிடம் விடப்படும். இவ்வளவும் ஆறு மாதங்களில் செயல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


இந்த அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "எல்லாருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்ததன் நோக்கமே, மேனிலைக்கல்வி வரை படித்து வேலை வாய்ப்பு பெற கம்ப்யூட்டர் கல்வி தேவை. அதை அளித்தால், மேனிலைக்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தனர்.திருப்பதியில் நடந்த மத்திய அரசின் கம்ப்யூட்டர் கல்வி ஊக்குவிப்பு திட்ட விழாவில், இந்த 500 ரூபாய் "லேப்-டாப்' கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப் பட்டது.

Wednesday, January 28, 2009

Obama what will do? - ஒபாமா என்ன செய்வார்?


படத்தை கிளிக்க்கி தெளிவாக பார்க்கவும்.நன்றி - சண்டே இந்தியன்

Friday, January 23, 2009

Satyam Raju is fraud or honest - சத்யம் ராசு நல்லவரா? கெட்டவரா? 420யா? இல்லை வள்ளலா?


இன்று மோசடிப் பேர்வழி என்று அறியப்படுகிற சத்யம் ராசு தனது சொந்தப் பணத்தின் மூலம் சுமார் பத்து லட்சம் ஏழைக் குடும்பங்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி, அந்தக் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு உதவிக் கொண்டு உள்ளார் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

சத்யம் ராமலிங்க ராசு தனது தந்தை பைர் ராசு நினைவாக ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பைர் ராசு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, அந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி வருகிறார்.

சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளை அந்தப் பகுதியல் உள்ள ஆறு மாவட்டங்களில் முனைப்புடன் செயல்படுகிறது.அந்த ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 கிராமங்களில் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளையின் மூலம் பலன் அடைந்த ஏழை மக்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சத்தைத் தாண்டும் என்பதை அறியும் போது உண்மையிலேயே வியப்பாகத்தான் இருக்கிறது.

வருமான வரி விலக்கைப் பெறுவதற்காகத் தான் இது போன்ற செயல்களில் சத்யம் ராசு ஈடு பட்டார் என்று கூறி அவரின் தொண்டுகளை நாம் எளிதில் ஒதுக்கி விடக் கூடாது. ஏனென்றால் சத்யம் ராசுவை விட பல மடங்கு வருமானம் ஈட்டும் எத்தனையோ பெரும் தொழில் அதிபர்கள் இது போன்ற தொண்டுகளைச் செய்யாமல் அதே நேரத்தில் வருமான வரியையும் கட்டாமல் தவிர்க்க என்ன செய்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம் இல்லையா?

ஆந்திர மாநிலத்தில் பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான ராமலிங்க ராசு தந்து வாழ்வில் எப்படி முன்னேறினார் என்பதைப் பார்ப்போம்,

1987 -ஆம் ஆண்டில் வெறும் 20 ஊழியர்களுடன் தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். நிறுவனத்தை ஆரம்பித்தார் ராமலிங்க ராசு.

1990 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த விற்று முதல் வெறும் ஐம்பத்தாறு லட்சம் ரூபாய் மட்டுமே.

1991-இல் சத்யம் நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு தொழில் ஒப்பந்தத்தைப் பெற்றது.

1999-இல் அமெரிக்காவின் நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்டது சத்யம் நிறுவனம். நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்ட முதல் இந்திய இணைய நிறுவனம் சத்யம்தான்.

2000-த்தில் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட உலகின் தலை சிறந்த முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 நிறுவனங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்ட பெருமையைப் பெற்றது சத்யம் நிறுவனம்.

2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனம் ஐ.எஸ்.ஒ தரச் சான்று பெற்றது.உலகிலேயே இக்தகைய தரச் சான்று பெற்ற முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் சத்யம்தான்.

2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் நியூ யார்க் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டன.

2003-ஆம் ஆண்டில் உலக வங்கிக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப சேவைகளைச் செய்யும் ஒப்பந்தம் சத்யம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டது.

2006-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருவாய் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டியது, அதுவே 2008-ஆம் ஆண்டில் இரண்டு பில்லியன் டாலர்களானது.

சத்யம் நிறுவனத்தை உலகின் முதன்மை நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற தனது லட்சியத்தாலும், எல்லை இல்லாத கனவுகளாலும், தணியாத ஆசைகளாலும் தூண்டப்பட்ட ராசுவின் தொடர் முயற்சிகளால் பெரும் வளர்ச்சி கண்டது சத்யம்.

இத்தனை முன்னேற்றங்கள் அடைந்த பின்னரும் கூட பின்னரும் எளிமையின் அடையாளமாகத்தான் இருந்தார் ராசு, அலுவலகத்திற்கு வரும் போது தனது ஊழியர்களைப் போலவே சத்யம் நிறுவன சின்னம் பொறிக்கப்பட்ட நீல நிற சட்டையைத்தான் அணிந்து வந்திருக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 56 லட்சம் மதிப்புள்ளதாக இருந்த சத்யம் நிறுவனத்தை, இந்த இருபது ஆண்டுகளில் - இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக - இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றி விட்டார் ராமலிங்க ராசு.

சத்யம் ராசு தனது எந்தக் கனவுகளால் சத்யம் நிறுவனத்தை உயர்த்தினாரோ அதே கனவுகள்தான் இன்று அந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விட்டது.
எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும், பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்ற சத்யம் ராசுவின் பேராசைதான் அவரின் இன்றைய நிலைக்கு வழிவகுத்து விட்டது.

சத்யம் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திக் காட்ட வேண்டும், மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விடத் தனது நிறுவனம் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற லட்சியங்களோடு சத்யம் ராசுவின் பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற பேராசையும் சேர்ந்து கொண்ட போது அவற்றை நிறைவேற்ற அவர் குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கினார்.

2001-ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் நிறுவனத்தின் மதிப்பினை உயர்த்திக் காட்ட நிறுவனத்தின் லாபத்தை அதிகப்படுத்திக் காட்டினார்.

அதாவது சத்யம் நிறுவனம் ஈட்டிய உண்மையான லாபத்தை விட அதிகளவு லாபம் ஈட்டியதாகப் பொய்யாகக் கணக்குக் காட்டினார்.நிறுவனத்தின் லாபப் பணம் வங்கிகளில் ரொக்கக் கையிருப்பாக முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் கணக்குகள் காட்டினார்.

இந்தப் பொய்யானது கடந்த ஏழு ஆண்டுகளாக அதாவது 28 காலாண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து இன்று கிட்டத்தட்ட 8000 கோடிகளாக மாறி உள்ளது.

ஒரு வங்கியில் முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு, பின்னர் அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து, அந்தப் பணத்தையே வேறு வங்கிகளில் இதே போல முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.

வங்கிகளில் முதலீடு செய்த ஆதாரங்கள் மட்டுமே ஒவ்வொரு காலாண்டுக் கணக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.எப்போதுமே வங்கிக் கணக்குகளின் ஒட்டு மொத்த வரவு செலவுக் கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.

இதன் மூலம் தன்னிடம் இருக்கும் பணத்தைப் பல மடங்கு அதிகப்படுத்திக் காட்டி இருக்கிறார் சத்யம் ராசு.கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாயை வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து உள்ளதாக கணக்குகள் காட்டப்பட்டு உள்ளது. ஆனால் அப்படி எந்தப் பணமும் இல்லை என்பதுதான் உண்மை.

சத்யம் நிறுவனத் தலைவர் ராசுவை மட்டும் இந்த மோசடியில் குற்றம் சொல்வது சரியாக இருக்காது, சத்யம் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய நிதி மோசடிகளால் தங்கள் பணத்தை இழந்து உள்ள முதலீட்டாளர்களும் இந்த மோசடிக்குப் பொறுப்புதான்.

தாங்கள் முதலீடு செய்துள்ள ,

சத்யம் நிறுவனம் காட்டிய ஒவ்வொரு காலாண்டு கணக்கிலும் அந்த நிறுவனத்தின் லாபத்திற்கும், இதே தகவல் தொழில் நுட்பத் துறைகள் உள்ள மற்ற நிறுவனங்கள் இதே காலாண்டுகளில் ஈட்டிய லாபத்திற்கும் இருந்த வேறுபாடுகள் என்ன? எவ்வளவு? ஏன்?

இவ்வளவு பணத்தை(8000 கோடிகள்) எதற்காக ரொக்கக் கையிருப்பாக வெறுமனே வைத்திருக்க வேண்டும்,

அந்தப் பணத்தைக் கொண்டு தொழிலை மேலும் விரிவு படுத்தலாமே,

வங்கிகளில் 8000 கோடிகளை வங்கியில் வைப்பு நிதியாக வைத்துள்ள ஒரு நிறுவனம் ஏன் பங்கு சந்தைகளில் தனது பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதன் மூலம் நிதி திரட்ட முனைய வேண்டும்,

திடீரென நிறுவனத்தின் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் எதனால் ஏற்பட்டன?

2007 ஆம் ஆண்டில் உலக வங்கியின் ஒப்பந்தத்தைப் பெற சத்யம் நிறுவனம் செய்த முறைகேடுகள் என்ன?

குறிப்பிடத் தகுந்த லாபத்தில் இயங்காத மைத்தாஸ் நிறுவனத்தை சத்யம் நிறுவனத்தின் மிகப் பெரும் நிதியைக் கொண்டு திடீரென வாங்க முற்பட்டது ஏன்?

இது போன்ற எந்தக் கேள்விகளையும் கேட்காமல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமலும் மெத்தனமாக இருந்த முதலீட்டாளர்களும்,

ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்த இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்காமல் இருந்த மத்திய மாநில அரசுகளும்,

இவற்றை எல்லாம் கண்க்கனிக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டுள்ள பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமும் இந்த மோசடிக்கு காரணம்தானே.

ஆந்திர நடுத்தரவர்க்கப் பட்டதாரி இளைஞர்களின் இதயத்தில் வழிகாட்டியாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகச் செய்த மக்கள் பணிகள் மூலமாக மக்கள் தொண்டனாகவும், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அவ்வப்போது கூறிய அறிவுரைகளால் பெரும் அறிவு ஜீவியாகவும் அறியப்பட்டு இருந்த சத்யம் ராமலிங்க ராசு தனது தணியாத பேராசைகளால் இன்று மோசடிப் பேர்வழி என்று பெயர் எடுத்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அடைக்கப் பட்டு உள்ளார்.

தனது இந்த நிலைக்குக் காரணம் என்ன? தனது தவறுகள் எங்கே ஆரம்பித்தன? எந்தத் தவறுகளைத் தன்னால் தவிர்த்திருக்க முடியும்? எந்தத் தவறுகளைத் தவிர்த்திருக்க முடியாது? என்பதை எல்லாம் ராமலிங்க ராசு இப்போது சிறைக்குள்ளே யோசித்துக் கொண்டிருப்பாரோ என்னவோ?

நன்றி - அறிவிழி

Tuesday, January 13, 2009

சத்யம் : பெயில் அவுட் அவசியமா ?


சத்யம் நிறுவனத்தை இந்திய அரசு, அமெரிக்க பாணியில் Bailout செய்யக்கூடும் என்ற தகவலை இந்திய நடுவண் அரசின் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டிருக்கிறார் . இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். அமெரிக்காவில் செய்யப்பட்டது போன்ற பெயில் அவுட் சத்யம் நிறுவனத்திற்கு பொருந்தாது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே சில நிறுவனங்களின் சரிவு கவிழ்த்து விடும் என்ற அச்சத்தால் தான் AIG போன்ற நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் பெயில் அவுட் செய்தது. லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சரிவு அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய அமெரிக்க அரசு மறுத்து விட்டது. இதனால் தான் லீமேன் திவாலாகியது.

இங்கு கூட லீமேன் பிரதர்ஸ், சத்யம் நிறுவனம் போல ஊழல் எதுவும் செய்யவில்லை. லீமேன் பிரதர்ஸ் செய்த மோசமான முதலீடுகள் காரணமாக எழுந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தான் அந் நிறுவனமும், வேறு பல அமெரிக்க நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்டன. தவிரவும் மிக மோசமான விலையை கொண்டிருந்த CDO (Collateralized debt obligation) பத்திரங்களை கொண்ட நிறுவனங்கள் சரிவது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பல வகையிலும் சரிவை கொடுக்கும் என்ற காரணத்தால் தான் பெயில் அவுட் என்பதையே அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்தது. இங்கு நிறுவனங்களிடம் இருக்கும் இந்த CDOக்களை அரசாங்கம் வாங்கிக் கொள்ளும். We need to Bailout Main Street, not Wall Street என்ற கோஷம் இங்கு பலமாக ஒலித்தது.

ஆனால் இந்தியாவில் உள்ள சூழ்நிலை என்ன ? சத்யம் நிறுவனத்தை ஏன் இந்திய அரசாங்கம் பெயில் அவுட் செய்ய வேண்டும் ? சத்யம் நிறுவனத்தின் சரிவு இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. அதுவும் தவிர அமெரிக்க நிறுவனங்கள் போல மோசமான முதலீடுகளால் சத்யம் இந்தச் சரிவை அடையவில்லை. மாறாக ராமலிங்க ராஜூ செய்த தில்லுமுல்லுகள் தான் இந் நிறுவனத்தை சரிவுக்குள்ளாக்கியது. அப்படியான சூழ்நிலையில் சத்யம் நிறுவனத்தை ஏன் அரசாங்கம் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் ?


சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தான் ஒரே காரணம் என்றால், அதற்கு வேறு வழிகள் உள்ளன. இன்போசிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தினை வாங்குவது போன்றவை தான் தீர்வாக முடியுமே தவிர சத்யம் நிறுவனத்தை அரசாங்கம் பெயில் அவுட் செய்வது அல்ல. அமெரிக்காவில் கூட மோசமான நிலையில் இருந்த Washington Mutual போன்ற நிறுவனங்களை JP Morgan Chase போன்ற நிறுவனங்கள் வாங்கின. இதைத் தான் இந்தியாவிலும் அரசாங்கம் செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை கொடுத்து சத்யம் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவில் பல் வேறு இடங்களில் இருந்த பல தொழிற்சாலைகள், ஆலைகள் மூடப்பட்ட பொழுது ஏன் இந்திய அரசுக்கு எந்த ஆலையையும், அதனால் பாதிப்பு அடைந்த தொழிலாளிகளையும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும். என் ஊருக்கு அருகில் இருக்கும் கடலூர் சிப்காட் மற்றும் புதுவையில் பல ஆலைகள் மூடப்பட்டன. அதில் பணியாற்றிய பல தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். பொருளாதார ரீதியில் நசிந்து போயினர். அவர்களை எந்த அரசாங்கமும் காப்பாற்ற வில்லை. ஆந்திராவிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல விவசாயிகள் தங்களின் விவசாயம் நசிந்து போய் தற்கொலை செய்து கொண்ட பொழுது இந்திய அரசாங்கம் அவர்களை பெயில் அவுட் செய்ததா ? தேர்தல் நேரம் வந்தால் மட்டும் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.

ஜெயலலிதா அரசாங்கம் அரசு அரசு ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது, அதுவும் 40-45 வயது மதிக்கத்தக்கவர்கள் அரசு வேலை தவிர வேறு வேலைகள் தெரியாத நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது ஊடகங்கள் தொடங்கி, நீதிமன்றம் வரை அதற்கு வக்கலாத்து தான் வாங்கினார்கள். அவ்வாறு வக்காலத்து வாங்கிய என்னுடைய சக ஐடி தோழர்களையும் நான் அறிவேன்.

ஆனால் இப்பொழுது இதே ஊடகங்கள் அலறுகின்றன.

சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 800 பணிப்பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். உடனே ஊடகங்களுக்கு எழுந்த கவலையும், அக்கறையும் நெஞ்சை உருக்கியது. ஊடகங்கள் ஓங்கி குரலெழுப்பின. உடனே அவர்கள் அனைவரையும் ஜெட் ஏர்வேஸ் மறுபடியும் பணிக்கு அமர்த்திக் கொண்டது. ஆனால் இந்த கருணை எல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கோ, விவாசாயிகளுக்கோ கிடையாது.


நன்றி - சசி

Tuesday, January 06, 2009

தமிழக வி.ஐ.பி.களுக்கு சப்ளையாகும்கள்ள துப்பாக்கிகள்


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

மிழ்நாடே திருமங்கலம் இடைத்தேர்தலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, தூத்துக்குடி மக்கள் மட்டும் கள்ளத்துப்பாக்கி வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கள்ளத்தனமாக விற்கப்பட்ட துப்பாக்கிகளை வாங்கிய அனைவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வி.ஐ.பி.கள் என்பதுதான் அதற்குக் காரணம். துப்பாக்கி வியாபாரிகளைப் பிடித்து கம்பீரம் காட்டவேண்டிய போலீஸாரோ, தேன்கூட்டில் கை வைத்த கதையாக அலறிக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு ஒரு துப்பாக்கி வாங்கிய தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவர், இன்னொரு துப்பாக்கியை வாங்கி அதை அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவருக்கும் கொடுத்திருக்கிறார். அந்த இருவரும் ஒரே ஒன்றியத்தில் எதிரும் புதிருமாக அரசியல் செய்கிறவர்கள் என்பதுதான் வேடிக்கை.

கள்ளத்துப்பாக்கி கும்பல் சிக்கியது எப்படி? அவர்களைப் பொறி வைத்துப் பிடித்த தனிப்படை டீமில் உள்ள போலீஸாரின் வாயைக் கிளறினோம்.

"தூத்துக்குடி ஏரியாவில் லோக்கல் ரவுடிகள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை சர்வசாதாரணமாக கள்ளத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருவது தெரிந்த விஷயம்தான். ஆனாலும், அவர்களை எந்த ஆதாரத்தில் பிடிப்பது என்று விழிபிதுங்கிக் கொண்டு இருந்தோம். அதே நேரத்தில் அவர்களுக்கு யார் துப்பாக்கிகள் சப்ளை செய்கிறார்கள் என்ற விஷயமும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி பகுதியில் கள்ளத் துப்பாக்கி விற்கும் கும்பல் நடமாடுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுகிறவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் தயாரானோம். யார் மூலம் துப்பாக்கிகள் தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது என்பதை முதலில் கண்காணித்தோம். சென்னை வண்டலூரில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் மேனேஜராக வேலை பார்த்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவன் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அதற்குக் காரணம், அவன் தூத்துக்குடிக்கு வரும்போதெல்லாம், பணத்தை தாராளமாகச் செலவு செய்து செல்வச் செழிப்போடு திரிந்ததுதான். அதைத் தொடர்ந்து அவனது நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். எங்கள் விசாரணையில் அவன்தான் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்குத் தூப்பாக்கிகளை கடத்திக் கொண்டு வருகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, அவனை முதலில் மடக்கத் திட்டமிட்டோம். இரண்டு, மூன்று முறை அவன் எங்களிடம் இருந்து தப்பிவிட்டான். இந்த நிலையில், கடந்த 28_ம் தேதி தூத்துக்குடி வந்த அவனைத் தூக்கினோம். அப்போதும் அவனிடம் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனாலும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்தான். அவனை இங்கே வைத்து விசாரித்தால் சொல்லமாட்டான் என்று, வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்துக்குக் கொண்டு போனோம். அங்கே கொண்டுபோனதுமே மிரண்டுபோய் சொல்லத் தொடங்கினான். அங்கே எங்கள் பாணி விசாரணையே தனி. அதற்கு பயந்துபோன அவன் உண்மைகளை கக்கத் தொடங்கிவிட்டான். `நான் மட்டும் துப்பாக்கிகளை விற்கவில்லை. என்னுடன் மேலும் மூன்று பேர் உண்டு' என்று அவர்களது பெயர் விவரங்களைச் சொன்னான்.

அவன் சொன்ன தகவலை வைத்து முத்துகிருஷ்ணாபுரத்தில் லாரி ஷெட் வைத்திருக்கும் மாயாண்டி, இந்திரா நகரைச் சேர்ந்த பழனிக்குமார், கே.வி.கே. நகரைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தோம். இந்த நான்கு பேரும் சேர்ந்துதான் ஒருவர் மூலம் ஒருவருக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்திருக்கிறார்கள். சரி, யாருக்கெல்லாம் துப்பாக்கிகளை விற்பனை செய்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போய்விட்டோம். காரணம், அவர்களிடம் துப்பாக்கிகள் வாங்கிய அனைவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வி.ஐ.பி.கள் என்பதுதான்!'' என்றவர்களிடம், `அந்த வி.ஐ.பி.கள் யார், யார்?' என்றோம். நீண்ட யோசனைக்கும் தயக்கத்திற்கும் பிறகே வி.ஐ.பி.களின் பெயர்களைச் சொன்னார்கள்.

"தூத்துக்குடி யூனியனில் சேர்மனாக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த கருணாகரன், ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு ஒரு துப்பாக்கி வாங்கியிருக்கிறார். அவரே இன்னொரு துப்பாக்கியை ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், மாவட்ட எம். ஜி.ஆர். மன்றத்தின் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனுக்குக் கொடுத்திருக்கிறார். தூத்துக்குடி வக்கீல் சங்கத் தலைவராக இருக்கும் பிரபு ஒரு துப்பாக்கி வாங்கியிருக்கிறார். தூத்துக்குடியில் இருந்து ஷிஃப்ட் ஆகி மதுரையில் செட்டில் ஆகிவிட்ட அடிதடிப் பேர்வழியான அசோக் என்பவர் இரண்டு துப்பாக்கிகள் கேட்டிருக்கிறார். அவருக்காக இரண்டு துப்பாக்கிகள் கொண்டு வந்தபோதுதான் எங்களிடம் சரவணக்குமார் சிக்கினான். உடனடியாக அவர்களைக் கையோடு அழைத்துச் சென்று மேற்படி வி.ஐ.பி.களின் வீடுகளில் சோதனை நடத்தினோம். கருணாகரன் வீட்டில் இருந்து ஒரு துப்பாக்கியைக் கைப்பற்றினோம். முன்னாள் அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்து துப்பாக்கியை கருணாகரனே வாங்கிக் கொடுத்துவிட்டார். வக்கீல் பிரபுவின் வீட்டில் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றினோம்.

வி.ஐ.பி.களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் புத்தம் புதியவை. இன்னும் ஒரு தடவை கூட பயன்படுத்தவில்லை. அந்தத் துப்பாக்கியில் `மேட் இன் யு.எஸ்.ஏ.' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை அல்ல. அதே நேரத்தில் அவற்றின் தயாரிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவை சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. நேபாளத்தில் இருந்துதான் அந்தத் துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அங்கே சில ஆயிரத்துக்கு வாங்கி, இங்கே கொண்டு வந்து ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்றிருக்கிறார்கள். இந்த நான்கு வி.ஐ.பி.களுக்கு மட்டும்தான் அவர்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்தார்களா? மேலும் வேறு யார் யாருக்கெல்லாம் விற்றிருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!'' என்றார்கள்.

நிருபர் என்று தெரிந்து கொண்டு நம்மை ஓரங்கட்டிய காக்கிகள் சிலர், "சார், இப்போது எங்களிடம் சிக்கியிருக்கும் இவர்கள் எல்லாம் கமிஷனுக்கு துப்பாக்கி விற்றுக் கொடுப்பவர்கள்தான். ஒரு துப்பாக்கி விற்றுக் கொடுத்தால் இவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். இவர்களுக்குத் துப்பாக்கி சப்ளை செய்தவன் செல்வம் என்பவன். அவனுக்கும் தூத்துக்குடிதான் சொந்த ஊர். வெங்கட் என்ற பிரவுன் சுகர் கடத்தல்காரன் இப்போது சென்னைச் சிறையில் இருக்கிறான். அவனிடம் டிரைவராக வேலை பார்த்தவன்தான் இந்த செல்வம். வெங்கட்டை வைத்து செல்வத்திற்கு துப்பாக்கி வியாபாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் நேபாளத்தில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வந்து சரவணக்குமார் மூலம் இங்குள்ள வி.ஐ.பி.களுக்கு விற்பனை செய்திருக்கிறான். செல்வத்துக்கு சென்னை அம்பத்தூரில் உள்ள நிர்மலா என்ற பெண்ணுடன் பழக்கம் உண்டு. நிர்மலாவின் கணவர் பீகாரைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.

இப்போது செல்வத்தைப் பிடிக்க எங்கள் டீம் சென்னை சென்றிருக்கிறது. ஆனால், உஷாரான செல்வம் தப்பி விட்டான். அவனது வீட்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் செல்வத்திடம் இருந்து ஊரப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் குமார் என்பவர் மூன்று துப்பாக்கி வாங்கியிருக்கிறார். அவரது வீட்டிற்கும் எங்கள் டீம் சென்றது. ஆனால், அவரும் தப்பிவிட்டார். அந்த செல்வம் சிக்கினால்தான் எவ்வளவு நாளாக அவர்கள் துப்பாக்கி வியாபாரம் செய்கிறார்கள்; யாரெல்லாம் அவனிடம் துப்பாக்கி வாங்கியிருக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரிய வரும். அரசல்புரசலாக எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, தி.மு.க. முக்கியப் புள்ளியின் உறவினர் ஒருவர், ரசிகர் மன்றத்திலும், கட்சியிலும் இருக்கும் ஒருவர் என்று நிறையப் பேர் துப்பாக்கி வாங்கியிருக்கிறார்கள்!'' என்று நம் காதைக் கடித்துவிட்டு மாயமானார்கள் அவர்கள்.

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நான்கு பேரின் வாக்குமூலங்களையும் ஒன்று விடாமல் பக்காவாக பதிவு செய்திருக்கிறது போலீஸ். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை வைத்து கள்ளத் துப்பாக்கி வாங்கிய அரசியல் வி.ஐ.பி.களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவார்களா? இதுதான் இப்போது தூத்துக்குடி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில், அந்த நான்கு பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது போலீஸ். அப்படி மீண்டும் விசாரிக்கும் பட்சத்தில் யார், யாரெல்லாம் சிக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. யூனியன் சேர்மன் கருணாகரன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமிக்கு வேண்டியவர். வக்கீல் பிரபு, மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் தீவிர ஆதரவாளர். எஸ்.பி. சண்முகநாதன் , முன்னாள் அமைச்சர். இவர்கள் மீதா இப்படியொரு குற்றச்சாட்டு? இதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்? வக்கீல் சங்கத் தலைவர் பிரபுவிடம் முதலில் கேட்டோம்.

"நான் யாரிடமும் துப்பாக்கி வாங்கவில்லை. அரசின் அனுமதியோடு துப்பாக்கி வாங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தைத்தான் ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியிருக்கிறேன். பிறகு எதற்காக கள்ளத்தனமாக துப்பாக்கி வாங்கப் போகிறேன்? போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் என்னிடம் துப்பாக்கி விற்றிருப்பதாக போலீஸ் சொல்கிறது. அதே நேரத்தில் என் வீட்டில் இருந்து துப்பாக்கி கைப்பற்றியதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், என்னிடம் அல்லவா அதற்கு சாட்சியாக கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும். நான் அங்கு இல்லை என்று வைத்துக் கொண்டாலும் என் வீட்டில் உள்ளவர்களிடமாவது வாங்கியிருக்கலாமே... எனவே, இதில் ஏதோ அரசியல் சதி இருக்கிறது'' என்றார் அவர்.

பிரபுவைத் தொடர்ந்து தூத்துக்குடி யூனியன் சேர்மன் கருணாகரனிடம் கேட்டோம். "எனக்கு எதற்கு துப்பாக்கி? எனக்கு துப்பாக்கி தேவை என்றால்தானே வாங்க வேண்டும். அதுவும் நான் துப்பாக்கி வாங்கி எஸ்.பி.சண்முகநாதனுக்குக் கொடுத்தேனாம். அவருக்கும் எனக்கும் பேச்சுவார்த்தையே இல்லை. பிறகு எப்படி நான் துப்பாக்கி வாங்கி அவருக்குக் கொடுப்பேன்? இந்த விஷயத்தில் யாரோ எங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள்!'' என்று வக்கீல் பிரபு மறுத்தது போலவே மறுத்தார் கருணாகரன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனை நம்மால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

இந்த வழக்கை நேரடியாக விசாரித்து வரும் நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பனிடம் அது பற்றிக் கேட்டோம். "அந்த நால்வரையும் கைது செய்து விசாரித்துவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். எனவே, அதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது!'' என்று சொல்லிவிட்டார். தூத்துக்குடி போலீஸாரோ... "துப்பாக்கிகளை கள்ளத்தனமாக விற்பது எப்படி குற்றமோ, அதைப் போலவே கள்ளத்தனமாக வாங்குவதும் குற்றம்தான். எனவே சட்டம் தனது கடமையைச் செய்யும். பொறுத்திருந்து பாருங்கள்!'' என்கிறார்கள். பார்ப்போம்.

Saturday, January 03, 2009

நாமும் எம்.பி ஆகலாம் போல இருக்கு



நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கிறது என்று தெரிந்தால் நமக்கும் எம்.பி ஆகலாம் என்று ஆசை வரும்.

எம்.பிகளுக்கு மாதச்சம்பளம் 16 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் சலுகைகளின் பட்டியல் மிக நீளம்.

ஒரு எம்.பியின் அலுவலக செலவுக்காக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் 4 ஆயிரம் ரூபாய், எழுத்து பொருள் செலவுக்காக, 2 ஆயிரம் ரூபாய் தபால் செலவுகளுக்காக. எம்.பி ஒருவர் தனது பணிகளுக்காக உதவியாளரை நியமித்துக்கொண்டோல் அவருக்குக் சம்பளமாக ரூ. 14 ஆயிரம் வரை லோக்சபா, ராஜ்யசபா செயலகம் அளிக்கும்.

நாடளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது தினசரி அலவன்சாக ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்.பி., தனது மனைவி அல்லது கணவர், எப்போதும் நாட்டின் எந்தப்பகுதிக்கும் ரயிலில் முதல் வகுப்பில் (First Class)இலவசமாக பயணம் செய்யலாம்.

ஒவ்வொரு எம்.பியும் 34 ஒருவழிதட(One Way) விமானப்பயனகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.
இந்தியாயவின் எந்தப்பகுதிக்கும் உடன் மனைவி அல்லது உறவினர்கள், தெரிந்தவர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம்.


ஒரு எம்.பியின் மனைவி அல்லது கணவர் அல்லது உறவினர் அவரைப் பார்ப்பதற்கு(per Year)
8 முறை இலவசமாக விமானத்தில் பறக்கலாம். இந்த அனுமதி, எம்.பிக்கான விமான பயண அனுமதியில் சேர்க்கப்படும்.

எம்.பி., ஒவ்வொருவருக்கும் 3 இலவச தொலைப்பேசி இணைப்புகளும்(3 land line phone connection), ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இலவச அழைப்புகளுக்கான அனுமதியுடன் செல்போன் இணைப்பும் வழங்கப்படும்(1,50.000 free calls in cellphone). மாதந்தோறும் ஆயிரத்து500 ரூபாய் அளவுக்கு இணையத்தையும் (free internet connection worth Rs. 1,500)இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாடாளுமன்ற உறுபினருக்கு டெல்லியின் இதயப்பகுதியில் வசிப்பிடம்(Heart of the City) ஒதுக்கப்படும். அது எம்.பியின் சீனியாரிடியைபொறுத்து பங்களாவாகவோ, இரட்டை மாடிக்குடியிருப்பு அல்லது விடுதியாகவோ இருக்கும். அதெற்கென குறைவான உரிமத்தொகை(Lease amount or Rent) எம்.பியின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரமும், 4 ஆயிரம் கிலோலிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்படும். நாடளுமன்ற உறுபினராக இருந்தவருக்கு ஓய்வூதியமாக(Pension) மாதம் ரூ. 8 ஆதிரம் வழங்கப்படும். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் எம்.பியாக இருந்தால் அவருக்கு கூடுதலான(increment) ஒவ்வொரு ஆடுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.800 வீதம் கூடுதலாக கணக்கிட்டு அளிக்கப்படும். ஒரு முன்னாள் எம்.பி. தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் ரலில் (First Class AC )முதல்வகுப்பு குளிர்சாதானப்பெட்டியில் பயணம் செய்யலாம்.

இது தவிர, கேபினெட் அமைச்சர்களாகவும்,கேபினெட் இணை அமைச்சர்களாகவும்
இருப்பவர்களுக்கு இன்னும் ஏராளமான அவர்களது துறை சார்ந்த சலுகைகள் கிடைக்கும்.

இவ்வளவையும் அனுபவித்து தங்கள் தொகுதிக்கு ஒதுக்கப்படும் எம்.பி நிதியையும் சரியாக தம் தொகுதி வளர்ச்சிக்கு செலவழிக்காமல் வைத்துருக்கிறார்கள்.

இவ்வளவு சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிற எம்.பிக்களை பார்க்கும்போது நம்மளுக்கும் எம்.பி ஆகலாம் என்று ஆசை வருகிறதுதானே!

சில எம்.பிகளுக்கு மட்டும் கீழே ------>
குறிப்பு: எம்.பிக்கள் லஞ்சமாக வாங்கும் பணம் மற்றும் பல்வேறு திட்டங்களில் கமிசனாக அடிக்கும் பணம் இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை. ஏனெனில் அது ஒவ்வொரு எம்.பிக்கும் மாறுபடும். (Ex. ராஜா - ஸ்பெக்தரம் 40,000 கோடி , லாலு பிரசாத் - 950 கோடி மற்றும் பல.)


நன்றி - Parliament of India

Tuesday, December 30, 2008

அரசியல்வாதிகள் எப்படி உருவாக வேண்டும்.


அரசியல் என்பது ஒரு நல்ல வார்த்தைதான். அரசியலில் நல்ல மனிதர்கள் , பொதுநலவாதிகள் இருக்கும் வரை அது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைய நாகரிகமற்ற அரசியல்வாதிகளால் , மக்களுக்கு அரசியல் என்றாலே அருவருக்க வைக்கும் வார்த்தையாக உள்ளது. தங்கள் அலுவுலகங்கள் , பணிசெய்யும் இடங்கள் போன்றவற்றில் எல்லாம் ஒருவர் உயர் பதவி பெற்றால், அரசியல் செய்து பதவியை பெற்றுவிட்டான் என்று சொல்லுகிறார்கள். அந்த அளவிற்கு அரசியல் என்ற வார்த்தை தரம் கெட்டு போய்விட்டது, எதனால் என்று கேட்டால் சில தவறான அரசியல் வாதிகளால்.

எதனால் இந்த தவறான அரசியல்வாதிகள் உருவாகுகிறார்கள் என்று பார்த்தால் , லட்சியத்திற்காகவும் , உரிமைக்காகவும் மற்றும் பொதுநலனிர்க்காகவும் போராடும் அல்லது பாடு படும் அரசியல் வாதிகள் இல்லாததுதான் காரணம். அப்படியே அவர்கள் தோன்றினாலும் சில காலத்துக்குள் தங்களுக்கு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெரிய அரசியல் கட்சிகளிடம் விலை போய்விடுகிறார்கள். அல்லது இவன் வளர்ந்துவிட்டால் பெயர் வங்கிவிடுவானோ என்ற காரணத்திற்காக மற்ற அரசியல் கட்சிகள் இவர்கள் மீது அவதூறுகளை பரப்பி மற்றும் பொய்யான வழக்குகளை புனைந்து , மக்களிடம் நல்ல அரசியல்வாதிகளின் கருத்துகள் சென்று விடாமல் மட்டம் தட்டிவிடுகிறார்கள்.

இவைகளுக்கு எல்லாம் காரணம் என்று பார்த்தால் , நம்மை ஆளுகின்ற அரசியல்வாதிகளும் உயர் பதவிகளிலும் இருப்பவர்கள் தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். உண்மையான கருத்துகளை சொல்பவர்களும் , உரிமைக்காகவும் போராடுபவர்களும் தண்டிக்கபடுகிறார்கள் , எதனால் என்று பார்த்தால் ஆட்சி செய்பவர்களுக்கு உண்மை பிடிப்பது இல்லை. நம்மை ஆளுபவர்கள் கொள்ளை அடிப்பவர்களும் , சுயநலவாதிகலாகவும் மற்ற எதையும் பற்றி சிந்திக்காதவர்கவும் , தங்களின் பதவி சுகத்திற்க்காக இன உணர்வு , மானம் , இலட்சியம் எல்லாத்தையும் இழக்கவும் தயாராக இருக்கின்றார்கள்.ஒரு சாதரண வேலைக்கு ஆள் தேர்ந்து எடுக்கும் போது அவர்களின் படிப்பு என்ன , அவர்களின் குடும்ப பின்னணி என்ன அவர்கள் மீது ஏதும் வழக்கு இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டை ஆளப்போகிற , உயர் அமைச்சர் பதவிகளில் இருக்கும் போகும் அரசியல் வாதிகளுக்கு எந்த ஒரு வரைமுறையும் இல்லை. தங்களின் சாதி செல்வாக்கை வைத்து , பண செல்வாக்கை வைத்து, ஊடகங்களின் மூலமாக மக்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து அல்லது தங்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளை வைத்து எதாவது ஒரு அரசியல் கட்ச்சியில் சேருகிறார்கள் அல்லது ஒரு அரசியல் கட்சியை தொடங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் பதவிக்கு வரும் பொழுது இவர்களிடம் நாம் ஆக்கபூர்வமான செயல்களை எதிர்பார்க்க முடியாது.
எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதிகளிடம் நாம் உண்மை , நேர்மை லட்சியம் என்று பேசினால் அவர்களுக்கு புரியாது. அமைச்சர்களாக இருப்பவர்களின் பின்னணிகளை பார்த்தால் அவர்கள் தலைமை வகிக்கின்ற துறைக்கும் எந்த விதமான சமந்தமும் இருக்காது, கல்வி தகுதியும் இருக்காது பிறகு எப்படி இவர்களிடம் நாம் ஒழுங்கான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். அரசியல் வாதிகளுக்கு அல்லது அமைச்சர்களுக்கு எதாவது குறைந்த பட்ச கல்வித்தகுதியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று சொன்னால் இதற்க்கு முன்னால் ஒரு சில படிக்காத மேதைகள் அமைச்சர்களாக இருந்ததை மேற்க்கோள் காட்டி சாக்கு போக்கு சொல்வார்கள்.

ஒரு அரசியல்வாதி எப்படி உருவாக வேண்டும் என்று பார்த்ததால் அனுபவத்தின் மூலமாகத்தான் வரவேண்டும் . தான் சந்திக்கும் பிரச்சனை , ஒரு சமுதாயம் சந்திக்கும் பிரச்சனை அல்லது ஒரு பிரிவினர் சந்திக்கும் பிரச்சனை, ஒரு இனம் சந்திக்கும் பிரச்சனை, செல்லுகின்ற இடங்களில் எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்கள் , நாட்டிற்க்கு எதிராக நடக்கும் செயல்கள் , ஒரு சாதரண குடிமகன் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் , சிறுபான்மை மக்கள் ஆதிக்க சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் பார்த்து ஒரு மனிதனின் மனது துடித்து இவர்களுக்காக சாதிக்க வேண்டும் என்று துடித்து ஒருவன் எழுகின்றானோ, அவனிடம் இருந்துதான் உண்மையான ஆக்கபூர்வமான செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியும். நல்ல செயல்கள் செய்யும் பொழுது பயங்கர எதிர்ப்புகள் பிரச்னைகள் வரத்தான் செய்யும் அவைகளை எல்லாம் தாண்டித்தான் வரவேண்டும்.ஒரு நேர்மையான அரசியல்வாதி தன்னுடைய கருத்துகளை , தன்னுடைய உணர்வுகளை சொல்லும் பொழுது மக்கள் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் , மக்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் இலட்சிய வாதிகளை தலைவர்களாகவும் , நேர்மையானவர்களை அமைச்சர்களாகவும் அடையமுடியும். நாமும் நம் நாடும் செழித்து வாழ முடியும்.


நன்றி - மக்களை தேடி - Dominic Panneer Selvam
இவர் ஒரு நல்ல எழுத்தாளர் அவசியம் பதிவுகளை படிக்கவும்
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009