Friday, March 27, 2009
Friday, March 20, 2009
Tamilnadu election survey 2009 - தமிழ்நாடு இளைஞர் ஓட்டு யாருக்கு?-- விகடன் மெகா சர்வே முடிவுகள்!
இது தேர்தல் சீஸன்!
அதிகாரம் யாருக்கு என்பதுதான் எல்லாத் தேர்தல்களும் தீர்மானிப்பது. மக்களின் விருப் பங்கள் என்ன என்று தெளிவு பெற விகடன் எடுத்தது மெகா சர்வே.
அதுவும் வாக்குச் சாவடிக்கு வலது காலை முதல் தடவையாக எடுத்துவைக்கும் இளம் தலைமுறை என்ன நினைக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினோம்.
'இளைஞர் ஓட்டு யாருக்கு?' என்ற கேள்வியே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அதுதான் முதல் மெகா சர்வேயின் அடித்தளம். அரசியல் மேடைக்கு இந்தத் தலைமுறை முதல் முத்தம் வைப்பதற்கு முன்னால் அவர்களின் ஆசைகள், கோபங்கள், விருப்பங்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற மாதிரியான கேள்வி கள் தயாரிக்கப்பட்டன. வாக்களிக்கும் வயது 18 என்பதால் கேள்விகளும் 18.
'உங்களிடம் வாக்கு கேட்டு நிற்கும் மனிதரிடம் முதல் தகுதியாக என்ன எதிர்பார்ப்பீர்கள்?' என்பதில் ஆரம்பித்து, 'அடுத்த பிரதமராக வரப் போவது யார்?' என்பதில் முடிகின்றனகேள்வி கள். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்ற நமது டீம், 18 வயதைத் தாண்டிய கல்லூரி மாணவ-மாணவியர், வேலை பார்க்கும் இளைஞர்கள், வேலைக்குக் காத்திருப்போர், விவசாயி கள், தொழிலாளர்கள் என இளவட்டங்களாகப் பார்த்து கேள்வித் தாள்களை நீட்டினோம்.
'இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் அக்கறை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லை. காலேஜ், சினிமா... இரண்டைத் தாண்டி எதுவுமே தெரியாது' என்று பெருசுகள் உதிர்க்கும் அவச் சொற்கள் அத்தனையும் பொய். ஐந்தாவது கேள்விக்கான பதில்களில் 'ஓட்டுக்குத் துட்டு கொடுக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற பதிலை ஏன் சேர்க்கலை?' என்று மதுரை கல்லூரி மாணவி ஒருவர் கேட்டார். நம் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் மட்டுமல்ல, அக்கறையும் அதைத் தாண்டிய தீர்க்கமான முடிவுகளும் இருக்கின்றன என்பதுதான் விகடன் கண்டுபிடித்த முதல் ரிசல்ட். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்!
''இளைஞர்களுக்கு அரசியல் அறிவு இல்லாததால்தான் நல்ல தலைவர்கள் உருவாவது தடைப்பட்டது'' என்று பெரியகுளம் ஜெயராஜ் கலைக் கல்லூரி மாணவர் முருகன் காரணம் சொன்னார். கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி உமா கௌரி அடித்த காமென்ட்டுகள் விறுவிறுப்பானவை. ''ஓட்டுப் போடவே எரிச்சலா இருக்கு. ஆனா, ஓட்டுதான் அரசியல் மாற்றத்துக்கான ஒரே ஆயுதம் என்பதால் நிச்சயம் வாக்களிப்பேன். அரசியல் இன்று வியாபாரமாக ஆகிவிட்டது. அதை மாற்றக்கூடியவர்கள் இளைஞர் படைதான்'' என்று கொட்டித் தீர்த்தார்.
அரசியல்வாதிகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் கோபங்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. 'தேர்தலுக்குச் செலவழிப்பதற்குப் பதில், தங்களுக்குள் பேசி முடிவெடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருவர் என்று சுரண்டித் தின்ன வேண்டியதுதானே?'' என்று கொதித்தார் திருவாரூர் ராஜா என்ற மாணவர்.
ஊழல் அரசியலுக்கு எதிராகவும், லஞ்சம் வாங்கிச் சொத்து குவிப்பதை அருவருப்பாகவும் இன்றைய இளைஞர்கள் நினைப்பது நம்பிக்கை தருவதாக இருந்தது.
இன்று தமிழ்நாட்டில் சூடான பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது இலங்கை விவகாரம். இது குறித்துஇளைஞர் களுக்குக் கவலைகள் அதிகம் இருக்கின்றன. 'எந்தக் கட்சியும் இலங்கைத் தமிழர்களுக்குச் சரியான நம்பிக்கையைத் தர வில்லை' என்கிறார்கள். 'நிச்சயமாக இலங்கைப் பிரச்னை, காங்கிரஸையும் அதோடு ஒட்டி உறவாடும் கட்சிகளையும் பாதிக்கும்'' என்று ஆவேசப்பட்டவர் திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார். 'இலங்கைத் தமிழருக்காக இதுவரை எதுவும் செய்யாம, இப்ப திடீர்னு உண்ணாவிரதம் உட்கார்றாங்களே. ஏன் இந்த திடீர் கரிசனம்?' என்று கிண்டலடித்தார் அதே ஊரைச் சேர்ந்த உதயா என்ற மாணவி. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையை உருட்டிக்கொண்டு இருப்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளார்கள்.
எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜயகாந்த் சொல்லி வந்தாலும், அவர் எதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் சேருவார் என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. ''தனியாப் போட்டியிட்டால்தான் அவருக்கான உண்மையான செல்வாக்கு என்ன என்பது அவருக்கே தெரியும்'' என்று ராமநாதபுரத்தில் ஒரு மாணவி சொல்ல, அவருடன் இருந்த தோழி, ''அப்படி அவரு போட்டியிட்டா நிச்சயம் எல்லாத் தொகுதியிலயும் டெபாசிட் போகும். அதைப் பார்த்தாவது புதுசா யாரும் கட்சி ஆரம்பிக்க மாட்டாங்க'' என்று அதிர்ச்சி ஊட்டினார்.
யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு மன்மோகனும் அத்வானியும்தான் இளைஞர்களின் சாய்ஸாக இருந்தது. மாயாவதியில் ஆரம்பித்து ஜே.கே.ரித்தீஷ் வரை தங்களுக்குப் பிடித்த ஆட்கள் பெயரைச் சொல்லி காமெடி பண்ணவும் தவறவில்லை. அக்கறையுள்ள இந்தியன், நேர்மை யானவர், நாட்டுப்பற்றுள்ளவர் பிரதமராக வர வேண்டும் என்பது பலரது ஆசை.
விகடன் டீம் சந்தித்தது மொத்தம் 2,301 இளைஞர்களை. அவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் மகத்தான செய்திகளை நாட்டுக்கு அறிவிப்பதாக அமைந்துள்ளன. யாரு டைய தாக்கமும் இல்லாமல் சுய முடிவுப்படிதான் நாங்கள் வாக்களிப்போம் என்று இளைஞர்கள் சொன்னது நம்பிக்கை யாக இருந்தது. தனது பிரதிநிதியாக சட்டமன்ற, நாடாளு மன்றத்தில் இருப்பவர் படித்தவரா, உள்ளூர்க்காரராஎன்பதை விட, ஊழலற்ற மனிதரா என்பதே முக்கியம் என்கிறார்கள். சாதி அரசியலை வெறுக்கும் இளைஞர்கள், ஓட்டைத் துட்டுக்கு விற்கும் செயலைக் கொடும் குற்றமாகக் கருது கிறார்கள். ஓர் அரசியல் தலைவரின் வாரிசு தகுதியானவராக இருந்தால், அவரை அரசியலுக்குக் கொண்டுவருவது தவறல்ல என்றும் கருதுகிறார்கள் இளைஞர்கள். அரசியல்வாதிகள் மீது எல்லாக் கோபங்களும் வைத்திருக்கும் இளைஞர்கள் வாக்களிப்பது அவரவர் விருப்பம் என்று சொல்லி அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். ஓட்டுப் போடு என்று கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை. அரசாங்கம் வழங்கும் சலுகைகளை ரத்து செய்யலாம் என்றும் பலர் வாக்களித்துள்ளார்கள்.
கல்லூரிகளுக்குள் அரசியல் புகுவதை இவர்கள் விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்துக்குள் அரசியல் புகுந்து, நடுநிலையான அமைப்பைச் சிதைத்து வருவதை வேதனையுடன் பார்க்கிறார்கள். ஈழப் பிரச்னையில் கருணாநிதியின் அணுகுமுறை தமிழினத் துரோகம் என்று முகத்தில் அடிப்பது மாதிரி தீர்ப்பளித்துள்ள இளைஞர்கள், ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தையும் பச்சையான சந்தர்ப்பவாதம் என்று கண்டிக்கிறார்கள்.
மதத் தீவிரவாதத்தை எதிர்த்துப் பேசுவதில் இளைஞர்கள் ஓட்டை இடதுசாரிகளால் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. பெண்களுக்கு அ.தி.மு.க-தான் அதிக முக்கியத்துவம் தருவதாக இவர்கள் சொல்கிறார்கள்.
'வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் ஈடுபட விருப்பமா?' என்ற கேள்விக்கு, 'எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயமாக வருவேன்' என்று 2,301 பேரில் 1,141 பேர் சொன்னார்கள்.
எல்லா இரவும் விடியும் என்பதே நம்பிக்கை!
Wednesday, March 11, 2009
49-O Election Rule in india - யாருக்கும் ஓட்டில்லை: ஆன்-லைனில் தீவிரம்
இப்போது, இந்த கோஷம் வலுத்து வருகிறது. தொகுதியில் நிறுத்தப்பட்ட எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை எனில், யாருக்கும் ஓட்டு போடாமல் இருக்கலாம்; அதற்கு ஓட்டுச்சீட்டில் தனி பிரிவு அமைக்கலாம் என்று பலரும் யோசனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கோர்ட்டுகளிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இப்போது, ஆன்-லைனில் இந்த பிரசாரம் அதிகரித்து வருகிறது.
மேலே பெயர் குறிப்பிட்டுள்ள யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என்று ஓட்டுச் சீட்டில் தனி கட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான் எங்கள் ஜனநாயக ரீதியான அதிருப்தியை வெளிப்படுத்த முடியும்' என்று ஆன்-லைனில் கருத்துக்கள் குவிந் துள்ளன.இது தொடர்பாக, சில வெப்சைட்கள் முளைத்துள்ளன. அவற்றில் இது தொடர்பான விஷயங்களை பலரும் வெளியிட்டுள்ளனர்.சில வெப்சைட்களில்ப்ளாக்' பிரிவுகளில் தன் கருத்துக்களை பலரும் தெரிவித்துள்ளனர். "பல நாடுகளில் நெகட்டிவ் ஓட்டு' உரிமை மக்களுக்கு உள்ளது. அவர்களுக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஓட்டளிக்காமல் இருக்கலாம்.அதே சமயம், ஓட்டுரிமையை பயன்படுத்தவும் செய்யலாம். இதற்காக, ஓட்டுச் சீட்டில் கடைசி கட்டத் தில், யாருக்கும் என் ஓட்டில்லை' என்று எழுதப்பட்டிருக்கும். அதில், முத்திரையிட்டு தன் அதிருப்தியை வெளிப்படுத்தலாம்' என்று "ப்ளாக்கில்' சிலர் கூறி, அதற்கு பல நாடுகளை உதாரணம் காட்டியும் உள்ளனர்.
கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வேட்பாளராக நிற்பதும், அவர்கள் எம்.பி.,யாக அமர்வதும், மந்திரியாவதும் வாடிக்கையாகிவிட்டது. "இப்படிப் பட்டவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு வேண்டுமா' என்று ஆவேசத்துடன் சிலர் கருத்து கூறியுள்ளனர்.ஆனால், அரசியல் சட்ட நிபுணர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. "ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சியை, வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தான் உள்ளது.
எதிர்மறையான நடவடிக்கையை வெளிக்காட்ட ஜனநாயகத்தில் இடமில்லை. ஆனால், கிரிமினல் வேட் பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வரும் நிலை துர திருஷ்டமானது தான். அதை தவிர்க்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்று தெரிவித்தனர்.
Saturday, March 07, 2009
Rajini Voice in 2009 Election - தேர்தல் : ரஜினி முடிவு என்ன ?

இதோ தேர்தலை அறிவித்துவிட்டார்கள். பரபரப்பு ஸ்டார்ட் ஆகிவிட்டது. தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் மற்றும் புலனாய்வு இதழ்களின் அடுத்த வழக்கமான சம்பிரதாயம் “ரஜினி வாய்ஸ் யாருக்கு?” என்று தலைப்பிட்டு தங்கள் இஷ்டத்துக்கு எழுதித் தீர்ப்பது தான்.
ஒரு பத்திரிக்கையாக மேலே சொன்னபடி எழுத அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் அப்படி எழுதுவதன் உள்நோக்கம் தான் நாம் கவனிக்கவேண்டியது.
நேரடியாக அரசியலுக்கு வராமல் அரசியல் பற்றிய எதிர்பார்ப்பு 13 வருடங்களாக ஒருவர் மீது இருக்குமானால் அது சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் இதுவரை ரஜினி ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பரப்பரப்பு அனைத்தும் ஜஸ்ட் வெறும் அறிக்கை மற்றும் தொலைகாட்சி பேட்டிகள் மூலம் மட்டுமே என்பது நினைவுகொள்ளத் தக்கது. அவர் எந்த சூழ்நிலையிலும் மக்களை இதுவரை நேரடியாக சந்திக்கவில்லை என்பதை “ரஜினி வாய்ஸ்” குறித்து அவ்வப்போது ஆதங்கப்படும் தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் நினைவில் கொள்ளவேண்டும்.
சூப்பர் ஸ்டாரின் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் சுருக்கமாக அதே சமயம் சரியாக இன்றைய மாலை மலர் தந்திருக்கிறது. முதல் இரண்டு பாராக்கள் சூப்பர்.
“ரஜினியிடம் அரசியல் இல்லை. ஆனால் அவரை சுற்றி அரசியல் உண்டு.” - வைரமுத்து.
Over to Maalai Malar (06/03/09)
பாராளுமன்ற தேர்தல் ரஜினி ஆதரவு யாருக்கு?
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ரஜினி ஆட்டி வைத்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. விரல் அசைவுக்காக காத்திருக்கும் ரசிகர் படை தமிழ் மக்கள் அளித்துள்ள சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றால் அவரது ஆதரவை பெற அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வரிந்து கட்டுவது உண்டு.
ரஜினி கட்சி துவங்கி அரசியலில் ஈடுபட வேண்டுமென ரசிகர்கள் வற்புறுத்தல்கள் தொடர்கிறது.. இவ்விஷயத்தில் அவர் தொடர்மவுனம் கடைபிடிப்பதால் தேர்தல்களில் அவர் கை நீட்டும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஆறுதல் படுகின்றனர்.
1996-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக அரசியல் களத்தில் பிரவேசித்தார் அ.தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக கருணாநிதி, மூப்பனாரை நேரில் சந்தித்து தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 1998 தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார். ஒரு வருடத்திலேயே அ.தி.மு.க-வால் மத்திய அரசு கவிழ்ந்தது. 1999-ல் தேர்தல் நடந்த போது பல கட்சிகள் ரஜினி ஆதரவை நாடி தூதுவிட்டன. ஆனால் எக்கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.. நடுநிலைமை வகித்தார். ரசிகர்கள் தனது படங்களை தேர்தலில் பயன்படுத்தக்கூடாது எனவும், தடை விதித்தார்.
ஆனால் 2004 பாராளுமன்ற தேர்தலில் நிலைப்பாடு மாறியது. பா.ம.க-வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அக்கட்சிக்கு எதிராக இறங்கினார்.. பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் எதிராக ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் என்றார். அதோடு நதி நீர் இணைப்பை நிறைவேற்றுவதாக அறிவித்த பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போடுவேன் என்றும் வெளிப்படையாக சொன்னார். அது போல் ஓட்டும் போட்டார்.
ஆனால் 2006 சட்ட சபை தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் மீண்டும் மவுனம். அவரது படங்களுடன் சென்று பிடித்த அரசியல் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்த ரசிகர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போதைய தேர்தலில் ரஜினி நிலை என்ன என்று ரசிகர்களும் அரசியல் கட்சியினரும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கின்றனர். மறைமுகமாக சில கட்சிகள் அவரது ஆதரவை கேட்டு தூது அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி படங்கள், ரசிகர்மன்ற கொடிகள் போன்றவற்றுடன் சென்றால் கூடுதல் வாக்குகளை திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.
ரஜினி ஏதேனும் கட்சியை ஆதரிப்பாரா அல்லது நடுநிலைவகிப்பாரா என்பது இன்னும் ஒரிருவாரத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முடிவை ரசிகர்மன்ற தலைவர் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் மூலம் விரைவில் தெரிவிப்பார் என்று ரசிகர்மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.
நன்றி - onlysuperstar.com