ஒப்பந்த அடிப்படையில் உலக வங்கிக்காக வேலை பார்த்து வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஓப்பந்தத்தை டிசம்பர் 25ம் தேதி உலக வங்கி, எட்டு வருடங்களுக்கு ரத்து செய்திருந்தது.ஒப்பந்த விதிமுறையை மீறி, உலக வங்கி ஊழியர்களுக்கு ஆதாயங்களை செய்து கொடுத்ததாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மீது உலக வங்கி குற்றம் சாட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. எங்கள் வேலை எதையும் எட்டு வருடங்களுக்கு செய்ய கூடாது என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸிடம் உலக வங்கி தெரிவித்து இருந்தது.
இப்போது அந்த வரிசையில் விப்ரோ மற்றும் மெகாஷாப்ட் நிறுவனத்தையும் உலக வங்கி சேர்த்திருக்கிறது.
அந்த இரு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் உலக வங்கி நிறுத்தி வைத்திருக்கிறது. இது குறித்து இன்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், சத்யம் கம்ப்யூட்டஸை போலவே விப்ரோ மற்றும் மெகாஷாப்ட் நிறுவனங்களும் ஒப்பந்தத்தை மீறி எங்கள் ஊழியர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. எனவே விப்ரோ, நான்கு வருடங்களுக்கு, அதாவது 2011 வரை எங்கள் வேலைகள் எதையும் செய்ய வேண்டாம் என்று தடை விதித்திருக்கிறோம். இன்னொரு ஐ.டி.நிறுவனமான மெகாஷாப்ட்டுடனான ஒப்பந்தமும், 2007 இலிருந்து நான்கு வருடங்களுக்கு தடை செய்யப்படுகிறது என்று அது தெரிவித்திருக்கிறது.
உலக வங்கியின் இந்த நடவடிக்கை குறித்து விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி கருத்து தெரிவிக்கையில், இதனானெல்லாம் எங்களது வர்த்தகம் பாதிக்கப்படாது என்றார். மெகாஷாப்ட்டும், இந்த நடவடிக்கையால் எங்களது வருமானம் ஏதும் பாதிக்காது என்று கருத்து தெரிவித்திருக்கிறது.


